Header

வாழ்க்கையை பாசிட்டிவ்வாக மாற்றுங்கள் !

வாழ்க்கையை பாசிட்டிவ்வாக மாற்றுங்கள் !




வாழ்க்கையில் நீங்கள் சின்னச் சின்ன மாறுதல்களைக் கொண்டுவர முயற்சித்து வெற்றி பெற்றீர்கள் என்றாலே பெரிய அளவிலான வெற்றிகள் உங்களைத் தேடி ஓடிவரும் என்கிற கருத்தைச் சொல்லும் புத்தகம்தான் ரிச்சர்டு கால்சன் எழுதிய ‘ஈஸியர் தன் யு திங்க்’.

நாம் எல்லோருமே நம்முடைய தற்போதைய நிலைமையிலிருந்து மாற வேண்டும் என்பதை விரும்புகிறோம். ஆனால், மாறவே முடிவதில்லை. தினமும் பத்து நிமிஷமாவது உடற்பயிற்சி செய்ய நினைக்கிறோம். அதைக்கூட தினமும் செய்ய முடியவில்லை. இதுதான் வாழ்க்கையின் நிதர்சனம். மாறவேண்டும், முன்னேறவேண்டும் என்ற எண்ணம் இருக்கும் அனைவருமே இதுபோன்ற சின்னச் சின்ன முன்னேற்றத்துக்கான மாறுதல்களை அவர்களுடைய வாழ்க்கையில் அன்றாடம்          ஏற்படுத்திக்கொள்ள முடியும்'' என்கிறார் ஆசிரியர்.

‘‘நம் வாழ்க்கை நம் எண்ணத்தில்தான் இருக்கிறது’ என்று சொல்லும் ஆசிரியர், நம் வாழ்க்கை குறித்து நாம் என்ன நினைக்கிறோம், எப்போது நினைக்கிறோம், எந்த அளவுக்கு நம்முடைய அந்த நினைப்புக்கு முக்கியத்துவம் தருகிறோம் என்பதிலேயே நம்முடைய வாழ்க்கையின் நன்மை, தீமைகள் அமைகிறது என்கிறார் ஆசிரியர்.



‘‘உங்கள் மனதில் தோன்றும் எண்ணங்களை நீங்கள் மட்டுமே கன்ட்ரோல் செய்ய முடியும். மீண்டும் சொல்கிறேன், எண்ணத்தை மட்டுமே கன்ட்ரோல் செய்ய முடியும் என்பதைப் புரிந்துகொள்ளுங்கள். எண்ணம்தான் வாழ்க்கை எனும்போது எண்ணத்தை கன்ட்ரோல் செய்தால் அதுவே வாழ்க்கையை மாற்றியமைத்துவிடுமே’’ என்று சொல்லும் ஆசிரியர், நெகட்டிவ் எண்ணங்கள் மனதுக்குள் குடிகொண்டு விடுவது குறித்து எச்சரிக்கிறார்.

‘‘மனதில் நெகட்டிவ் எண்ணங்கள் வரும்போது இரண்டு விஷயங்களை நீங்கள் நினைவில் கொள்ளவேண்டும். நீங்கள்தான் அந்த நெகட்டிவ் எண்ணங்களைக் கொண்டுவருகிறீர்கள் என்பது. இரண்டாவது, அந்த எண்ணங்கள் உங்கள் முன்னேற்றத்துக்்கு முட்டுக்கட்டையைப் போட்டுவிடும் என்பது. இந்த இரண்டையும் நினைவில் வைத்தால் நம் எண்ணத்தின் மீது நமக்கு முழுமையான கன்ட்ரோல் எப்போதுமே இருக்கும். நம் எண்ணத்தை கன்ட்ரோ லில் வைக்கத் தவறி, அதன் கன்ட்ரோலில் நாம் சென்றுவிட்டால், அது இரண்டு விதமான இடத்துக்கு நம்மைக் கொண்டு சென்றுவிடக்கூடும். ஒன்று யாரும்   எதிர்பார்க்காத உச்சத்துக்கு அல்லது அதல பாதாளத்துக்்கு. இதனாலேயே இப்போது முதல் உங்கள் எண்ணத்தின் கடிவாளத்தைக் கையில் எடுத்துக் கொள்ளுங்கள்’’ என்கிறார் ஆசிரியர்.

‘‘உலகில் 80 - 90 சதவிகித மனிதர்கள் ஏதாவது ஒரு மதத்தைச் சார்ந்தவர் களாகவே இருக்கின்றனர். இதில் பெரும்பாலானோர் தங்கள் அப்பா, தாத்தா, பாட்டி போன்றவர்கள் எந்நெந்த விஷயங்களைச் சரி என்று நம்பினார்களோ, அவற்றைச் சரியென்று நம்பி வாழும் வாழ்க்கையைத் தன்னை அறியாமலே கையில் எடுத்துக்கொள் கிறார்கள். நிறைய விஷயங்களில் கேள்வி எதுவுமே கேட்காமல் பின்பற்ற ஆரம்பித்துவிடுகிறாார்கள். நிறைய முடிவுகள் இந்த நம்பிக்கைகளின் அடிப்படையிலேயே எடுக்கப்படுகிறது.

நீங்கள் விரும்பும் வாழ்க்கையை அமைத்துக்கொள்ள முதலில் நீங்கள் சுயமாக முடிவெடுக்கப் பழகுங்கள்.  அப்பா செய்தார், அண்ணன் செய்தார், தாத்தா செய்தார் என்ற பாதையில் செல்வது மிகப் பெரிய புதைகுழியில் சிக்கிக்கொள்வதற்கான வழி. ஏன் என்ற கேள்வி கேட்காமலேயே செய்யப்படும் இந்தமாதிரி மூதாதையரைப் பின்தொடரும் விஷயங்கள் நம்மை முன்னேற்றுமா, நாம் நினைத்த இடத்துக்கு நம்மைக் கூட்டிச்செல்லுமா என்பது சந்தேகம்தான்’’ என்கிறார்.

இந்தவகைத் தொட்டில் பழக்கங்கள் நிறையப் பிரச்னைகளை நமக்குக் கொண்டுவந்துவிடும் என்று சொல்லும் ஆசிரியர், இதைத் தவிர்க்க உடனடியாக முடிவுகள் எதையும் எடுக்காதீர்கள். கொஞ்சம் சிந்தியுங்கள் என்கிறார்.

உதாரணத்துக்கு, விடுமுறைக்கு எங்கே போகிறீர்கள் என்ற கேள்விக்கு உடனடி பதில் சொல்லவேண்டுமெனில், எங்கள் கிராமத்துக்கு என்று யோசிக்காமல் சொல்வோம். ஏன் கிராமம் என்றால் எப்பவுமே அங்கே தானே செல்வோம் என்பதுதான் பதிலாக இருக்கும்'' என்கிறார்.

''உங்கள் கருத்துக்கு மாற்றுக்கருத்தையும் கொஞ்சம் காதுகொடுத்து கேளுங்கள். சிலசமயம் அவர்களுடைய பாயின்ட் உங்களை மாற்று முடிவுகளை எடுக்கச் செய்யலாம். அல்லது ஏற்கெனவே எடுத்த முடிவுதான் சரி என்று ஆணித்தரமாக உறுதியும் செய்ய உதவலாம்'' என்கிறார் ஆசிரியர்.

ஆசிரியரின் நண்பர் ஒருவர் ஒருநாள்,  ‘‘என் வீட்டை நான் கடன் வாங்கியிருந்த வங்கி ஏலம்போடப்போகிறது. நான் கொஞ்ச நாட்களாகவே இஎம்ஐ சரியாகக் கட்டவில்லை'' என்று சொல்லிவிட்டு கூலாக வேலைகளைச் செய்துகொண்டிருந்தாராம்.

என்ன இவன், இவ்வளவு கூலா இருக்கிறானே என்று நினைத்து, நண்பனிடமே கேட்டாராம் ஆசிரியர். ரொம்ப நாளைக்கு முன்னாலே நான் வாழ்க்கையின் தத்துவத்தைக் கற்றுக்கொண்டேன் என்று சொன்ன நண்பன், தொடர்ந்து நம் வாழ்க்கை நிச்சயமாக (நல்லதாகவோ/கெட்டதாகவோ) மாறும். அது எப்போது மாறும் என்பதுதான் நமக்கு முன்னா டியே தெரியாது. என் வாழ்க்கையில் அது இப்போது என்று சொல்லி கூலாகச் சிரித்தாராம்.

‘‘மாற்றம் வந்தே தீரும். அந்த மாற்றத்தை நாம் எப்படி எதிர் கொள்கிறோம் என்பதில்தான் நம் மனதில் நெகட்டிவ் எண்ணங்கள் வருகிறதா, பாசிட்டிவ் எண்ணங்கள் வருகிறதா என்பதே இருக்கிறது. ஒருநாளில் ஓரிரண்டு நிமிடமாவது மனதார நம்முடைய வாழ்க்கையில் முன்னேற்றமும் மாறுதலும் வரும் என்று ஏக்கமில்லாமல் நினையுங்கள். அதுவே உங்கள் வாழ்க்கையில் பாசிட்டிவ் விஷயங்களைக் கொண்டுவரும்” என்கிறார் ஆசிரியர். அதேபோல் “மனதில் போராட்டங்கள் வெடிக்கும் போது கொஞ்சம் நிதானித்து நம்முடைய எண்ண ஓட்டத்தை ஒரு சினிமா பார்ப்பதுபோல் மூளையை வைத்து பார்த்தால், சரியான தெளிவு பிறக்கும்’’ என்றும் சொல்கிறார் ஆசிரியர்.

‘‘ஒவ்வொரு நாளுமே ஒரு மினி வெக்கேஷனை நீங்கள் எடுத்துக் கொள்ளப் பழகவேண்டும்” என்று சொல்லும் ஆசிரியர் “இப்படி சில மணித்துளிகள் வெக்கேஷன் எடுத்து கொள்வதே ஏக்கத்துடன் அலைபாயும் இந்த உலகத்தில் நிஜத்தைப் புரிந்து கொள்ள உதவும் தருணம்'' என்கிறார்.

இக்கரைக்கு அக்கரை பச்சை என்பது பழமொழி. ஆனால், பச்சையாய் இருப்பதுதான் புல்லின் குணம் என்பதை முதலில் புரிந்துகொண்டு செயல்பட வேண்டும்'' என்று முத்தாய்ப்பாய்ச் சொல்கிறார் ஆசிரியர். அன்றாடம் கொஞ்சம் புத்தகம் படியுங்கள். புத்தக வாசிப்பு உங்கள் மூளையை க்ரியேட்டிவ் மற்றும் பாசிட்டிவ் எனர்ஜியில் திளைக்கச் செய்யும்’’ என்று சொல்லி முடிக்கிறார் ஆசிரியர்.
வாழும் வாழ்க்கையிம் மாற்றம் பெற விரும்பும் அனைவருமே படிக்க வேண்டிய புத்தகம் இது.